135) கங்கா தேவி
கங்கா தேவி (கி.பி.14ம் நூற்றாண்டு) :
வரலாற்றில் நிறைய பெண்மணிகளும் அரசிகளும் தங்களது தியாகத்தாலும் வீரத்தாலும் கருணையினாலும் பக்தியினாலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் "மதுரா விஜயம்" என்ற நூலை எழுதிய கங்கா தேவி என்ற கங்கம்மா. இவர் விஜயநகர பேரரசரான புக்க ராயரின் மகனான குமார கம்பணின் மனைவி. 60 ஆண்டுகளாக டெல்லி சுல்தான்களின் படையெடுப்புகளால் மதுரை அடிமைப்பட்டு இருந்ததை வீழ்த்தி மதுரையை அன்னியரின் பிடியிலிருந்து மீட்டு மதுரை மீனாட்டசியம்மனின் சிலையை காத்த வரலாற்றை கொண்டவர் இவர்.
கங்காம்பிகா என்ற இயற்பெயருடைய இவர் விஜயநகர பேரரசை தோற்றுவித்த ஹரிஹர புக்க சகோதரர்களில் புக்க ராயரின் மகனான குமார கம்பனாவின் மனைவி. இவர் சமஸ்கிருதத்தில் சிறந்த அறிஞர் மட்டுமில்லாது கவி பாடும் வல்லமை உடையவர். இவர் தனது கணவரான குமார கம்பனார் மதுரை மீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை அகற்றி மதுரையையும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலையும் மீட்ட வரலாற்றை வீர கம்பராய சரிதம் அல்லது மதுரா விஜயம் நூலில் எழுதியுள்ளார். இதில் காஞ்சிபுரத்தை கைப்பற்றிய கம்பனார் மற்றும் கங்கா தேவி இருவரின் கனவிலும் மதுரை சுல்தான்களின் பிடியிலிருந்து தென்னிந்தியாவை மீட்குமாறு ஒரு அன்னை வந்து பாண்டியர்களின் புராதன வாளான சந்திரஹாசத்தை கொடுத்து மதுரையை காக்க வேண்டுகிறார். அந்த பெண் தான் மதுரை மீனாட்சி தேவி என்று கங்கா தேவி குறிப்பிடுகிறார். அவரது அறிவுரைக்கு செவிசாய்த்து கம்பராயர் மதுரை மீது படையெடுத்து முஸ்லீம் சுல்தானை வென்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலையையும் ஶ்ரீரங்கம் கோவிலையையும் மீட்டெடுத்தார். இந்த போரின் போது இவரும் கணவருடன் இணைந்து போரிட்டதோடு போர்கள நிகழ்ச்சிகளை பார்த்து பின்னர் இந்த போரை பற்றி மதுரா விஜயம் நூலில் எழுதினார். அரசவையில் கவிஞராக பணியாற்றியதுடன் ஆண்களை போல குதிரைகளிலும் சவாரி செய்தார். கவி காளிதாசரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு இவர் கவிதை எழுத ஆரம்பித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் துர்க்கை சந்நிதிக்கு அருகில் விண்ணக திருமண சாட்சி மரத்தின் அருகில் ஒரு லிங்கம் உள்ளது. அந்த சுவருக்கு பின்னால் தான் 43 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி.1370ல் குமார கம்பணன் மற்றும் மதுரை அர்ச்சகர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூல லிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது. சுவரை தோண்டி எடுக்கும்போது இரண்டு விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததாகவும் மூல லிங்கத்தின் மீது இருந்த பூமாலை வாடாமல் இருந்ததாகவும் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை கூறுகிறது.
இவரது மதுரா விஜயம் நூல் கி.பி.1916ல் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் நூலகத்தில் பண்டிட் ராமஸ்வாமி சாஸ்திரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 500 ஒற்றைப்படை வசனங்களாக பாதி தொலைந்து போன நிலையில் கிடைத்தது. அது பின்னாளில் அச்சுபதிப்பில் மாற்றப்பட்டது. கி.பி.1950ல் அண்ணாமலை பல்கலைக்கழகம் மதுர விஜயத்தின் ஆங்கில பதிப்பை அச்சிட்டு வெளியிட்டது.

Comments
Post a Comment