22) இராணி மீனாட்சி
இராணி மீனாட்சி ஆட்சி (கி.பி.1731-1736) :
மங்கம்மாளின் பேரனான விஜயரங்க சொக்கநாதர் கி.பி.1731ல் மறையவே அவருக்கு வாரிசு இல்லாததால் அவரது மனைவியான ராணி மீனாட்சி தன் உறவினரான விஜயகுமாரன் என்ற சிறுவனை தத்தெடுத்து அவனை ஆட்சி பொறுப்பில் அமர்த்தி அவன் சார்பாக தானே ஆட்சி பொறுப்பு ஏற்று நடத்தி வந்தார். விஜயகுமாரனின் தந்தையான பங்காரு திருமலை என்பவர் தன் மகனுக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சிக்கு தனக்கு உரிமை கோரினார். தான் ஆட்சிக்கு வர உதவுமாறு எதிரியான ஆற்காடு நவாப்பின் உதவியை கேட்டார். ஆற்காடு நவாப்பின் மருமகனான சந்தா சாகிப்புக்கு பெருமளவு பணத்தை லஞ்சமாக கொடுத்து தனக்கு ஆதரவாக இருக்குமாறு வேண்டினார். ராணி மீனாட்சியும் சந்தா சாகிப்பிடம் தன்னை ஆதரிக்குமாறு வேண்ட அவர் ராணியிடம் இலஞ்சம் கேட்டார். அவருக்கு 1 கோடி பக்கோடா பணம் இலஞ்சமாக தர ராணி மீனாட்சி ஒப்புக்கொண்டார். திருக்குரான் வடிவத்தில் செய்யப்பட்ட செங்கல்லின் மீது சந்தா சாகிப் சத்தியம் செய்து பணத்தை பெற்றுக்கொண்டார். பணத்தை பெற்றுக் கொண்டதுடன் ராணி மீனாட்சியை கைது செய்து சிறையில் இட்டார். நம்பிக்கை துரோகத்தை தாங்க முடியாத ராணி மீனாட்சி அடுத்து வேறு எதுவும் அவமானங்கள் நேரகூடாது என்று சிறையில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். கி.பி.1731ல் ஏறிய ஆட்சி கி.பி.1736ல் முடிந்ததுடன் மதுரையில் நாயக்கர்கள் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. ராணி மீனாட்சி மறைவுக்கு பின்னர் சந்தா சாகிப் பங்காரு திருமலையையும் கொன்று நாயக்கர்களின் ஆட்சியை முடித்து வைத்தார். உறவினர்களுக்குள் பதவி போட்டியால் அன்னியரை நாடி ஒருவருக்கொருவர் தங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டனர். நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்த பரிதாபத்துக்குரிய ராணிகளின் வரிசையில் ராணி மீனாட்சியும் இடம்பிடிக்கிறார்.
Comments
Post a Comment