40) அன்னா சாண்டி
அன்னா சாண்டி (கி.பி.1905-1996) :
இந்திய சரித்திரத்தில் பெரிதும் பேசப்படும் பெண்களுள் ஒருவராக இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக ஆண்களுக்கு சரிக்கு சமமாக நின்ற இந்த பெண்மணி தான் நீதிபதி அன்னா சாண்டி. இந்தியாவின் முதல் பெண் நீதிபதி மட்டுமல்ல காமன்வெல்த் நாடுகளின் முதல் பெண் நீதிபதியும் கூட.
இவர் கி.பி.1905ல் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட திருவனந்தபுரத்தில் பிறந்தார். பிற்காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவி சிரியன் கத்தோலிக்கர் ஆனார். கி.பி.1926ல் முதுகலையில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணியானார். கி.பி.1929 முதல் வழக்கறிஞராக பயிற்சியை ஆரம்பித்தார். பெண்களின் உரிமைக்கு குரல் கொடுக்க ஶ்ரீமதி என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். கி.பி.1931ல் அசெம்பிளிக்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.பி.1937ல் திருவாங்கூர் திவான் சி.பி.ராமசாமி ஐயரால் திருவாங்கூர் முன்சீப்பாக நியமிக்கப்பட்டார். இதுவே பின்னாளில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கி.பி.1948ல் இவர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட அடிகோலியது. பின்னர் கி.பி.1959 பிப்ரவரி 9ல் கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது 54 வயதில் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவில் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமையை பெற்றார். காமன்வெல்த் நாடுகளில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதியும் இவராகவே இருந்தார். 8 ஆண்டுகள் பதவியில் இருந்து தனது 62வது வயதில் கி.பி.1967 ஏப்ரல் 5ல் ஒய்வு பெற்றார். ஒய்வு பெற்றாலும் சாண்டி இந்திய சட்ட ஆணையத்தில் சேவைகளை தொடர்ந்தார். தனது சுயசரிதையான "ஆத்மகதா"வை கி.பி.1973ல் எழுதி வெளியிட்டார். தனது 91வது வயதில் இவர் மரணமடைந்தார். அந்த காலத்திலையே ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என்று உரிமை கொடுத்த பெண்களில் இவரும் ஒருவர். பெண்களின் உரிமைகளுக்காக சட்டத்தின் மூலம் போராடிய பெண்ணுரிமை வாதி தான் இந்த அன்னா சாண்டி என்ற இந்தியாவின் முதல் பெண் நீதிபதி.

Comments
Post a Comment