69) கோப்பெரும்பெண்டு
கோப்பெரும் பெண்டு :
வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ராணிகளுள் ஒருவர். சங்க இலக்கியத்தில் பல பாடல்களை இயற்றிய அரசி. இவரது கணவரான பாண்டிய மன்னர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மறைவுக்கு பின்னர் "தந்தையை இழந்தவருக்கு தந்தை ஸ்தானத்தில் மற்றொருவர் வரலாம். ஆனால் கணவரை இழந்தவர்க்கு அப்படி வர முடியாது " என்று புறநானூற்று பாடலை எழுதி கணவரின் சிதையில் விழுந்து உயிர்விட்டவர் இவர்.
கோப்பெரும் பெண்டுவின் கணவரான பூதப்பாண்டியன் சங்க காலத்து பாண்டிய மன்னர்களுள் ஒருவர். குறுநில மன்னர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற அடைமொழி இவருக்கு உண்டு என்பதினால் ஒல்லையூர் என்ற ஊரை வென்றோ அல்லது அவ்வூரை தானமாகவோ கொடுத்திருக்கலாம் என்று கருதுகின்றனர். புறநானூற்றிலும் அகநானூற்றிலும் இவர் பாடிய பாடல்கள் உள்ளது. பூதப்பாண்டியன் மீது சேர, சோழ மன்னர்கள் படையெடுத்து வந்தனர். அது கண்ட இம்மன்னன் "அந்த இரு அரசர்களையும் நான் புறங்காண ஒடச்செய்வேன். அப்படி செய்யாவிட்டால் மைத்தீட்டிய அழகிய கண்களை உடைய என் மனைவியை நான் புரிந்தவனாவேன்...." என்று தன் மனைவி மீது வெஞ்சினம் உரைத்து ஆணையிட்டு போர்க்களம் புகுந்தார். கோப்பெரும் பெண்டு கணவருக்கு வீரத்திலகம் இட்டு போர்க்களத்திற்கு வழியனுப்பி வைத்தார். ஆனால் போரின் முடிவு வேறு விதமாக சேர சோழ அரசர்கள் வெற்றியுடன் பூதப்பாண்டியன் போரில் மாண்டு போனார். கணவர் மரணமடைந்தவுடன் மனைவி கோப்பெருங்கோப்பெண்டு "தாய் தந்தை முதலானோரை இழந்தவர்க்கு அம்முறை சொல்லி பிறரை காட்டி அவர் துயரை ஆற்றலாம். கணவரை இழந்தவர்க்கு அங்ஙனம் காட்டுவது இல்லையன்றோ" என்று கூறி "பல்சான்றீரே பல்சான்றீரே செல்க என் சொல்லாது ஒழிக என விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே" என்னும் பாடலை பாடி சிதையில் ஏறி உடன்கட்டையாக உயிர் துறந்தார். கற்பிற் சிறந்த பெண்மணி என்று இவரை பற்றி புறநானூற்றில் அரிசில் கிழார் மற்றும் பெருஞ்குன்றூர் கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். பாடல் இயற்றும் திறமையும் வல்லமையும் கொண்ட இந்த மகாராணி தன் கணவர் இல்லாது இவ்வுலகில் தான் மட்டும் இருப்பதை வெறுத்து கணவரின் சிதையில் தன்னுயிர் துறந்தார்.

Comments
Post a Comment