71) மாதங்கினி ஹஸ்ரா

 ‌மாதங்கினி ஹஸ்ரா (கி.பி.1870-1942) :


இந்திய சரித்திரத்தில் எத்தனையோ பெண்களும் உயிர்தியாகங்கள் செய்துள்ளனர். தனது முதுமை பருவத்திலும் நாட்டு விடுதலைக்காக போராடிய இவர் ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டின் போது கொல்லப்பட்டார். இவர் காந்தி புரி என்றும் வங்காளத்தின் பெண் காந்தி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். 

இவர் இன்றைய வங்காளத்திலுள்ள தும்லுக் அருகிலுள்ள ஹோக்லா என்னும் கிராமத்தில் கி.பி.1870 அக்டோபர் 19ம் தேதி பிறந்தார். ஏழை விவசாயிக்கு மகளாக பிறந்ததால் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்லவில்லை. 12 வயதிலையே இவருக்கு திருமணம் முடிந்து 18 வயதிற்குள்ளேயே இவரது கணவர் மறைந்ததால் இளம் வயதிலையே விதவையானார். இவருக்கு மகன் மற்றும் மகள் என எந்த வாரிசுகளும் இல்லை. இதனால் இந்திய சுதந்திர போராட்ட களங்களில் தீவிரமாக பணிபுரிந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தின் போது  கி.பி.1930ல் பங்கு கொண்டார். அது மட்டுமல்ல உப்பு சத்தியாகிரக போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் "செளகிதார் வரி ஒழிப்பு" போராட்டத்திலும் கலந்து கொண்டார். இதில் ஆளுநரை எதிர்த்து பேரணியாக சென்றதற்காக பஹ்ரம்பூரில் 6 மாதம் சிறை தண்டனை பெற்றார். திரும்பவும் 6 மாதம் சிறை தண்டனை இவருக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். காந்தியடிகளின் வாக்குப்படி கதர் நெய்தார். கி.பி.1933ல் சோரம்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு போலீஸாரின் தடியடியால் பயங்கரமாக தாக்கப்பட்டார். இதன் பிறகும் சமூக பணிகளிலும் ஈடுபட்டார். பெரியம்மை நோய் தாக்கிய பகுதிகளில் மீட்பு குழுக்களிலும் இணைந்து பணியாற்றினார்.


கி.பி.1942 செப்டம்பர் 29ல் வெள்ளையனே வெளியேறு திட்டத்தின் ஒரு பகுதியாக மேதினிபூர் மாவட்டத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற திட்டமிட்டு பேரணியாக தும்லுக் காவல் நிலையத்தை கைப்பற்ற 72 வயதான இவரின் தலைமையில் பேரணியாக சென்றனர். 144 தடையுத்தரவை மீறியும் சென்ற இவர்களை கலைந்து போக உத்தரவிட்டும் தேசியக்கொடியை ஏந்தி முன்னேறினார். இவரை நோக்கி சுட்டனர். காயம்பட்டாலும் கூட்டத்தை சுட வேண்டாம் என்று கேட்டு முன்னேறிய இவரை மீண்டும் 3 முறை சுட்டதில் நெற்றி தலை என்று காயம்பட்டு "வந்தே மாதரம். தாய்நாட்டுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறி உயிர் விட்டார். தொடர்ந்த போராட்டங்களால் ஆங்கில அரசுக்கு இணையாக தம்லுக் அரசாங்கம் நடந்தது. இவரின் உயிர்த்தியாகம் தந்த வீராஷேசம் எல்லார் மனதிலும் நிறைந்து இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் கொல்கத்தாவில் பல தெருக்களுக்கு பள்ளிக்கூடங்களுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பெண்மணிக்காக முதன்முதலில் இவர் மறைந்த தும்லுக் நகரில் சிலை வைக்கப்பட்டது. 2002ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 60வது ஆண்டு விழாவின் போது இவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. தும்லுக் நகரில் மாதங்கினி ஹஸ்ரா அரசுக்கல்லூரி பெண்களுக்காக நிறுவப்பட்டது. தள்ளாடும் முதுமை பருவத்திலும் தனக்கென்று என்று இருக்காமல் நாட்டின் விடுதலைக்காக போராடி தனது இன்னுயிரை தியாகம் செய்த வீரப்பெண்மணியின் தியாகத்தை போற்றுவோம்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்